வைகையில் கரைபுரண்ட வெள்ளம்… பச்சைப்பட்டுடன் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை: வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட... மக்கள் வெள்ளம் விடிய விடிய காத்திருக்க ஆனந்தமாய் ஆடி அசைந்து எழுந்தருளி தரிசனம் தந்தார் கள்ளழகர். இந்த ஆனந்த நிகழ்வை கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பூ மழை தூவி வணங்கினர்.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 30ல் துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை தோளுக்கினியான் அலங்காரத்தில் பெருமாள் கோயிலை வலம் வந்தார். மாலை 6.10 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல் கம்புடன், மேள, தாளம் முழங்க தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டார் கள்ளழகர்.

எதிர்சேவை
இரவு முழுவதும் வழி நடை பயணமாக வந்த கள்ளழகர், நேற்றுப் காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருகைதந்தார். அங்கு காத்திருந்த பக்தர்கள் கள்ளழகரை கோவிந்தா முழக்கமிட்டு எதிர்கொண்டு அழைத்தனர். காலை 8.30 மணிக்கு புதுாரிலும் எதிர்சேவை நடைபெற்றது.

ஆண்டாள் சூடிய மாலை
தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கிய அழகருக்கு இரவு 12.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின் இரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக்கொண்டு புறப்பட்ட அழகர் வெட்டிவேர் சப்பரத்திலும், 3 மணிக்கு தமுக்கம் எதிரில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

அதிர்வேட்டு முழங்க
அதிர்வேட்டுகள் முழங்க, தங்கக் குதிரை வாகனத்தில் ‘‘பச்சைப்பட்டு'' உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தர அதிகாலையில் வைகை ஆற்றுக்கு வந்தார். அப்போது அங்கு காத்திருந்த வீரராகவப் பெருமாள் வெள்ளிக்குதிரையில் வந்து அவரை எதிர்கொண்டு வரவேற்றார்.

வைகையில் இறங்கினார்
சகோதரரின் வரவேற்பை பெற்றுக்கொண்ட கள்ளழகர் ஆடி ஆடி அசைந்து ஆனந்தமாய் வெள்ளமென பெருகி வந்த வைகை ஆற்றில் ஆனந்தமாய் எழுந்தருளினார்.

விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
கள்ளழகரைக் காண வைகை ஆற்று வெள்ளத்தில் கூடி இருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா‘ என்று எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணை முட்டியது. பூக்களை மழையென தூவி வணங்கினர்.

நெய்தீப வழிபாடு
செம்புகளில் சர்க்கரையை நிரப்பி தீபம் ஏற்றி அழகருக்கு காட்டி வழிபட்டார்கள். ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படி பந்தல்களை மூன்று முறை சுற்றிவந்து, நாலாபுறமும் கூடி இருந்த பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் மண்டகப்படிக்கு திரும்பினார்.

விசிறி வீசிய பக்தர்கள்
கோடை காலம் என்பதால் கள்ளழகருக்கு வியர்க்குமோ என்று எண்ணி விசிறி வீசினர். தண்ணீரை பீய்ச்சியடித்தும் வழிபட்டனர். அழகர் வேடமிட்ட பக்தர்கள் ஆனந்த நடனமாடினர்.

மதுரை விழாக்கோலம்
அழகர் ஆற்றில் இறங்கிய அந்த அற்புத நிகழ்வை காண தமிழக அமைச்சர்களும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வைகை ஆறும் ஓடும் இடங்களில்
இதேபோல வைகை ஆறும் வாடிப்பட்டி, மானாமதுரை உள்ளிட்ட இடங்களிலும் வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.












Click it and Unblock the Notifications