கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சித்ராதேவி - உடலை வாங்க மறுத்து போராடிய உறவினர்கள் கைது
மதுரை திருமங்கலம் அருகே தீவைத்து எரித்து கொல்லப்பட்ட சிறுமி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Recommended Video
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமி சித்ராதேவியின் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அருகே ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ரா உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்க மறுத்த சித்ராதேவி
திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த சிறுமி சித்ராதேவி, அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரை நடுவக்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஒருதலையாக காதலித்தார்.
பாலமுருகனின் காதலை ஏற்க மறுத்தார் சிறுமி. இதனால் வஞ்சம் கொண்ட பாலமுருகன் சிறுமியை சீண்டினார். பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தும் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
எரிந்து கருகிய சித்ரா
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மாலையில் சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி, தீவைத்துவிட்டு, தப்பியோடினார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி சித்ராதேவிக்கு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சித்ரா மரணம்
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி சித்ராதேவி, இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பாலமுருகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெற்றோர்கள் போராட்டம்
மாணவி சித்ரா தேவிக்கு பாலமுருகன் பல முறை தொந்தரவு கொடுத்ததாகவும், இது குறித்து 3 முறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுவே பாலமுருகன் சித்ராதேவியை கொலை செய்யக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
நிவாரணம் தேவை
பாலமுருகன் மீதான புகாருக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலமுருகனுக்கு உதவிய நபர்களையும் கைது செய்யும் வரை சித்ராதேவி உடலை வாங்கப் போவதில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்த போலீஸ்
ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்படும் வரை மாணவி சித்ராதேவி உடலை வாங்கப் போவதில்லை என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.