துக்ளக் ஆசிரியர் சோ திடீர் சுகவீனம்... ஏன்..?
சென்னை: துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக திடீர் திடீரென முக்கியஸ்தர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2ஜி வழக்கில் மே 26ம் தேதி அதாவது நாளை கோர்ட்டில் ஆஜராகவேண்டிய நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும், அவரது மகள் கனிமொழிக்கும் அடுத்தடுத்து சுகவீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நாளை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று கருதப்பட்ட துக்ளக் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
79 வயதான சோவுக்கு நேற்று மாலையில் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனடியாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்தனர்.
அங்கு சோவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு இரவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சோ தனது துக்ளக் பத்திரிக்கையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியையும், தேசிய அளவில் மோடி பெற்றுள்ள வெற்றியையும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.