தென்மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாட்டம்
நெல்லை: உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பேராலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, சென்னை, கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொண்டாட்டங்கள் எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றன. நள்ளிரவில் இருந்தே தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதால் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள். இதனால், சென்னையில் உள்ள சாந்தோம், எழும்பூர் கதீட்ரல், ராயப்பேட்டை வெஸ்லி உட்பட பல முக்கிய தேவாலயங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் வாழ்த்து
சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலய மான கதீட்ரல் பேராலயம், மிகவும் பழமை வாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட்ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

வாழ்த்து கூறிய மக்கள்
திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனைகளில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.

புறநகர் தேவாலயங்கள்
சென்னை புறநகர் பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், காட்டாங்குளத்தூர் புனித லூர்து அன்னை ஆலயம், மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ஆலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தென்மாவட்டங்களில் கொண்டாட்டம்
நெல்லை,மதுரை,விருதுநகர்,குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தமிழக கேரளா மாநில எல்லைப் பகுதிகளிலும் இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துவ மத மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தென் மாவட்டங்களில் நகரங்கள்,கிராமங்களில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புகழ்பெற்ற தேவாலயங்கள்
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலங் களான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயம். பூண்டி மாதா திருத்தலம், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

அமைதி ஊர்வலம்
மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை மீண்டும் புத்துணர்வு பெறவேண்டும், துயரங்கள், குடி, கொலை,கொள்ளை,போன்றவைகள் வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுதல்களை முன் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேவாலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ., ஆர்.சி உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணன்கோவில் சாலையில் உள்ள ஆசீர்வாத மாரநாதா சபையில், பாஸ்டர் ஒய்.டேவிட்குமார் சிறப்பு கிறிஸ்துமஸ் தேவ செய்தி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்துலக சமாதானத்திற்காகவும், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார். ஆர்.சி. தேவாலயம் உள்ளிபட நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications