சினிமா பைனான்சியர் கொலை: துணை நடிகையை கைது செய்ய பெங்களூர் விரைந்த தனிப்படை
சென்னை: சினிமா பைனான்சியர் கொலையில் தேடப்பட்டு வரும் துணை நடிகை சுருதி சந்திரலேகா பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பரப்பாடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் ரெனால்டு பீட்டர் பிரின்சோ (36). இவருக்கு துணை நடிகை சுருதி சந்திரலேகாவுடன் ரகசிய தொடர்பு இருந்து வந்துள்ளது.
பாலில் விஷத்தைக் கலந்து...
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பீட்டரின் முன்னாள் தொழில் கூட்டாளியான உமா சந்திரன் உதவியுடன் சுருதி சந்திரலேகா பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்து பீட்டர் பிரின்சோவைக் கொலை செய்துள்ளார். சென்னையில் இக்கொலை நடந்துள்ளது.
உறவினர் அளித்த புகார்...
பின்னர் நெல்லை கொண்டு செல்லப்பட்ட பீட்டரின் பிரின்சோவின் உடல் பாளையங்கோட்டை, ஆசீர்வாதநகர் என்ற இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரின்சோவின் காரை சாலையில் கண்ட அவரது உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் இக்கொலைச் சம்பவம் அம்பலமானது.
3 பேர் கைது...
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் என்ற சதாம், காந்திமதி ராமன் என்ற விஜய், ரபீக் உஸ்மான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளிகளான சுருதி சந்திரலேகாவும், உமா சந்திரனும் தலைமறைவானார்கள்.
தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடு...
அவர்கள் அடையாளம் காட்டியதன் பேரில், பீட்டர் பிரின்சோ உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டினர். எலும்பு கூடாக மீட்கப்பட்ட உடலை, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த எலும்புக்கூடு பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பல புதிய தகவல்கள்
இந்நிலையில், வழக்கில் தேடப்படும் உமா சந்திரனின் முக்கிய கூட்டாளியான ஜான் பிரின்சோவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து பீட்டர் பிரின்சோவை சென்னையில் இருந்து பாளையங்கோட்டைக்கு கொண்டு வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரகசிய தொடர்பு
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகை சந்திரலேகா, உமா சந்திரனுடனும் ரகசிய தொடர்பு வைத்து இருந்துள்ளனர். பீட்டர் பிரின்சோ ஆன்லைன் வர்த்தகம் மூலமும் பணம் சம்பாதித்து வந்தார். அந்த பணத்தை அபகரிக்க 2 பேரும் சதித்திட்டம் தீட்டியதாகவும், அதற்கான தருணத்தை எதிர்பார்த்து இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ரூ.75 லட்சம் பணம்
சம்பவத்தன்று பீட்டர் பிரின்சோவுக்கு ஏதோ வழியில் ரூ.75 லட்சம் பணம் வந்ததை அறிந்துகொண்டனர். எனவே அன்றைய தினம் அவரை கும்பலாகச் சென்று, விஷம் கலந்த பாலை கொடுத்து, கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றுவிட்டு, அந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பெங்களூருக்கு தப்பினர்...
உமாசந்திரனும், சந்திரலேகாவும் பெங்களூருக்கு தப்பிச் சென்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். விரைவில் துணை நடிகை சுருதி சந்திரலோகவும், உமா சந்திரனும் சிக்குவார்கள் என தெரிகிறது. அதன் பிறகு பீட்டர் பிரின்சோ கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே, பீட்டர் பிரின்சோ கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.