அதிமுக - பாஜக தொண்டர்களிடையே மோதல்... உருட்டுக்கட்டையால் தாக்கியதில் பாஜக நிர்வாகி காயம்!
சென்னை: சென்னை அண்ணாநகரில் வாக்குச்சாவடி அருகே ஏற்பட்ட மோதலில் அதிமுகவினரால் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட பாஜக நிர்வாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிடுகிறார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகேயுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் காலையில் 3 மணி நேரம் இருந்ததாக காலையில் திமுகவினர் குற்றம் சாட்டினர். ஆனால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியல் ஈடுபட முயன்றனர்.

இதனால் திமுக - அதிமுக தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் காவல்துறை ஆணையர் பர்வேஸ் குமார் இரு கட்சியினரையும் எச்சரித்து அனுப்பினார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட அமைந்தகரை பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்குச் சேகரிப்பதாக பாஜக வேட்பாளருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் சுரேஷ்கருணா அங்கு விரைந்து சென்றார். அப்போது அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அதிமுகவினர், பாஜக வட்டத்தலைவர் சத்தியநாராயணனை உருட்டைக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த சத்திய நாராயணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிமுகவினர் அடுத்தடுத்து திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் அண்ணாநகர் தொகுதி பரபரப்பு காணப்பட்டது.












Click it and Unblock the Notifications