தஞ்சையில் ஒரு நிர்பயா... நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி கூட்டு பலாத்காரம் - 6 பேர் கைது
தஞ்சையில் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நண்பனுடன் ஆற்றங்கரையில் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தஞ்சாவூர்: பள்ளி மாணவனுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட மிருகங்கள் கூட்டு பலாத்காரம் செய்து சூறையாடிய சம்பவம் தஞ்சாவூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நண்பனுடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சூறையாடியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. பெண்களை பாதுகாக்க எத்தனையோ திட்டங்கள் போடப்பட்டும் நாடு முழுவதும் தினசரியும் ஏதாவது ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, அவருடன் பள்ளியில் படிக்கும் மணிமாறன் என்பவனுடன் நெய்வாசல் ஆற்றங்கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரவிச்சந்திரன் என்பவர் மாணவியின் நண்பனை அடித்து விரட்டிவிட்டு சிறுமியை இழுத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரது நண்பன் இளவரசனுக்கு போன் செய்து அழைத்துள்ளார்.
இளவரசன் அங்கு வரவே அந்த மாணவியை அவரிடம் விட்டு விட்டு ஓடிவிட்டார் ரவிச்சந்திரன். பின்னர் இளவரசனும், அவரது தம்பியும் இணைந்து அந்த மாணவியை சூறையாடியுள்ளனர்.
இதைப்பார்த்த அந்த பகுதியில் மணல் அள்ளும் இளைஞர்களும் மாணவியை காப்பாற்றாமல் சீரழித்தனர். அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் சிலர், தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்ட போலீசார், அவரை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன், தம்பி உட்பட அதே பகுதியை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். மாணவியை அடுத்தடுத்துஆறு பேர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்ற கும்பலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது போல, இந்த குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தஞ்சாவூர் நகர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.