தலையில் ‘கொட்டி’ ஈவ்டீசிங்... பிளஸ் 2 மாணவி தீக்குளிப்பு - 2 மாணவர்கள் கைது
சென்னை: சென்னையில் ஈவ்டீசிங்கால் மனமுடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் செல்வி. எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, பொதுத்தேர்வை எழுதிய செல்வி தனது தோழியுடன் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அருகில் உள்ள மற்றொரு பள்ளி மாணவர்கள் இருவர் செல்வியையும், அவரது தோழியையும் கிண்டல் செய்துள்ளார். இதனைத் தட்டிக் கேட்ட செல்வியின் தலையில் அம்மாணவர்கள் கொட்டியதாகத் தெரிகிறது.

பொது இடத்தில் தாக்கப்பட்டதால் அவமானம் அடைந்த செல்வி, இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் அம்மாணவர்களை நேரில் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், இந்த தாக்குதலால் பெரும் அவமானம் அடைந்த செல்வி, மன உளைச்சலில் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வி, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து செல்வியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், சென்னையில் ஈவ் டீசிங்கால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications