பருவநிலை மாற்றம் எதிரொலி: சாதாரண காய்ச்சலுக்கு கூட பயத்துடன் சிகிச்சை பெறும் மக்கள்
நெல்லை: நெல்லை பகுதியிலும் மாவட்டத்திலும் பருவ நிலை மாறி மாறி காணப்படுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் அடுத்தடுத்து 10 சிறுவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதியில் அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் தங்கள் குழந்தைகளை நோய்களில் இருந்து காப்பாற்ற வெளியூரில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவ நிலை அடிக்கடி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
கொசு உற்பத்தி அதிகரிப்பால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலர் மர்ம காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது போல் திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 75 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.