மிடாசுக்கு போட்டியாக மெக்டவல்.. சசி குடும்பத்தால் மூடப்பட்ட ஆலை தொழிலாளர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
மிடாஸ் மதுபான ஆலைக்கு போட்டியாக திகழ்ந்தது மெக்டவல். இது சசிகலா குடும்பத்தினரால் மிரட்டப்பட்டு மூடப்பட்டதால் அதன் தொழிலாளர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: சசிகலா குடும்பத்திற்கு போட்டியாக ஏதாவது தமிழகத்தில் இருந்துவிட முடியுமா? அவர்கள் குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் மிடாஸ் மதுபான ஆலைக்கு போட்டியாக இருந்த மெக்டவல் மதுபான ஆலை சசிகலாவின் குடும்பத்தினரால் மூடப்பட்டது.
ஓபிஎஸ், சசிகலா பிளவையடுத்து, தமிழக அரசியலில் பல உண்மைகள் வெளியுலகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. சசிகலா குடும்பத்தினரால் மெக்டவல் என்ற மதுபான ஆலை மூடப்பட்டுள்ளதாக அதில் பணி செய்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா குடும்பத்தினர் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலை போன்றே மெக்டவல் என்ற மதுபான ஆலை இயங்கி இருக்கிறது. அது தங்களுக்கு போட்டியாக இருப்பதாக கருதிய சசிகலா குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக மிரட்டி அதனை மூட வைத்துள்ளனர்.
தற்போது, ஓபிஎஸ், சசிகலா இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு மெக்டவல் ஆலை ஊழியர்கள் நேரில் சென்றனர். அப்போது, மூடப்பட்ட மெக்டவல் மதுபான ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை சென்னையை அடுத்து படப்பை கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் மதுபானங்கள்தான் தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.