பலாத்கார கொலை செய்யப்பட்ட வேலூர் மாணவி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு: ஓ.பி.எஸ்
சென்னை: வேலூர் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘'வேலூர் மாவட்டம் கல்யாண பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி மாச்சனூர் கிராம அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 15 ஆம் தேதி அன்று பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது 16 ஆம் தேதி அன்று கல்யாண பெரியாங்குப்பத்தில் முட்புதர் ஒன்றில் கை கால்கள் ரிப்பனால் கட்டப்பட்ட நிலையில் அம்மாணவி இறந்து கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்படி மாணவியின் பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
புலன் விசாரணையில் அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவன் அம்மாணவியைப் பாலியல் பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த அம்மாணவனை காவல் துறை தனிப்படையினர் பிடித்து விசாரித்ததில் அம்மாணவன் இறந்துபோன மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த கால் கொலுசை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
பாலியல் பலாத்கார முயற்சியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அம்மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திட காவல்துறை தலைமை இயக்குநருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்''என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications