'கரண்ட்' இருந்தும் 'லைட்' இல்லை... இருட்டில் நடந்த முதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா!
தூத்துக்குடி: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மின்சாரம் இருந்தும் இருளில் நடந்ததால் விளையாட்டு வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நல இயக்குநரகம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் நடந்தது. ரூ.4லட்சத்து 59ஆயிரம் செலவில் நடத்தப்பட்ட இதில் தடகளம், கபடி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். போட்டிகளைத்தொடர்ந்து நேற்று பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.
விழாவில், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சி.த.செல்லபாண்டியன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த விழா மாலை 5 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 6 மணிக்கு பிறகுதான் துவங்கியது.
விழாவில் முக்கிய விருந்தினர்களான மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பேசி முடித்தபின்பு பரிசு வழங்கும்போது விழா மேடையில் இருள் சூழ்ந்தது. மின்சாரம் இருந்தும் அங்கு மின்விளக்கு வசதி ஏதும் இல்லாத காரணத்தினால் வீரர், வீராங்கனைகளுக்கு இருளிலேயே பரிசு வழங்கப்பட்டது. பரிசு கொடுப்பது யார் என்பது தெரியாமலேயே வீரர்கள் பரிசுகளை பெற்று சென்றனர்.
இருளில் விழாவினை ஏற்பாடு செய்திருந்த மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர்ஜோதி சற்குணத்தின் மீது விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களின் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் கேட்டபோது பதில் சொல்ல மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications