தூத்துக்குடி துப்பாக்கி சூடு: கேள்விகளால் துளைத்த நிருபர்கள்.. பதில் சொல்ல முடியாமல் திணறிய முதல்வர்
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார்.
ஸ்டெர்லைட் ஆலையால் ஆபத்து ஏற்படுவதாக கூறி, தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்களிலும் போலீசார் சரமாரியாக சுட்டு கொன்றதில் 13 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.
2 நாட்கள் பிறகு
2 நாட்கள் ஆகியும் இதுபற்றி முதல்வர் விளக்கம்தரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேரில் சென்றும் பார்க்கவில்லை. இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை தீவிரப்படுத்தி அரசுக்கு நெருக்கடி தரும் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. அப்பாவிகள் உயிருக்கு நியாயம் வேண்டும் என்ற குரல்கள் தமிழகம் முழுக்க எழுந்துள்ளன.
முக்கியத்துவம் அரசியலுக்கு
இதன்பிறகு, இன்றுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிருபர்களை சந்தித்தார். அப்போதும் முதலில் மு.க.ஸ்டாலின் செய்த போராட்டம் பற்றிதான் முதலில் பேசினாரே தவிர துப்பாக்கி சூடு பற்றி கூறவில்லை. அரசியல் ரீதியாக ஸ்டாலினை விமர்சனம் செய்தார். அவர் தர்ணா செய்தது நாடகம் என்றார். இதன்பிறகுதான் மெல்ல தூத்துக்குடி பற்றி பேச ஆரம்பித்தார்.
டிவியில் பார்த்துதான் தெரியுமாம்
எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், தற்காப்புக்காகத்தான் போலீசார் சுட்டிருப்பார்கள் என, நினைக்கிறேன். வன்முறை அதிகரித்துவிட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் இதில் ஊடுருவியதுதான் என்றார். துப்பாக்கி சூடு நடந்தபோது டிவியில் பார்த்துதான் அதை தெரிந்து கொண்டேன் என்று ஷாக்கிங் பதில் ஒன்றையும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். நான் சென்னையில்தான் இருந்தேன், டிவியில் பார்த்துதான் வன்முறை எப்படி நடந்தது என்பதை அறிந்து கொண்டேன் என கூறினார் முதல்வர். உளவுத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் என்கிற உயர் பதவியில் உள்ள ஒருவர், சாமானிய மக்களை போல டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறியபோது நிருபர்கள் ஷாக்காகினர். மேலும் ஒருத்தனாவது சாவனும் என கூறியபடி போலீஸ் குறி பார்த்து சுட்ட வீடியோ வெளியாகி உலகமே பார்த்த பிறகும், தற்காப்புக்கு சுட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி போகாதது ஏன்
நீங்கள் ஏன் இதுவரை தூத்துக்குடி சென்று மக்களை சந்திக்கவில்லை என நிருபர்கள் அடுத்த கேள்வி கணையை வீசினர். அதற்கு முதல்வர் அளித்த பதில் அடடே ரகம். "தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட 144 தடை உத்தரவு போட்டுள்ளோம். அதை மீறி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்றது தவறு. தடை உத்தரவையெல்லாம் விலக்கிய பிறகு தூத்துக்குடி செல்வதே நியாயம். நான் சட்டத்தை மதிப்பதால் அங்கு செல்லவில்லை " என்றார்.
அரசு துறை விதித்த தடை
144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளதே அரசின் கீழ் உள்ள காவல்துறைதான். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களே தைரியாக போகக்கூடிய ஒரு சூழல் உள்ள ஊரில், முதல்வர், அமைச்சர்கள் இன்னும் செல்லாமல் இருப்பதும், 144 தடையுத்தரவை விலக்கிக்கொண்டு கூட செல்ல கூடிய வாய்ப்பு இருந்தும் அதை செய்ய மறுப்பது ஏன் என்ற கேள்வி நிருபர்களுக்கு எழுந்தது. இதுகுறித்தும், குறிபார்த்து மக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதும் ஏன் என்பது போன்ற அடுத்தடுத்த கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர். ஆனால், அவசரமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார் முதல்வர்.