ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி- ஜெ. வழங்கினார்
சென்னை: ஆந்திர என்கவுன்டரில் கொல்லப்பட்ட 20 தமிழகர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 5 பேருக்கு பணி நியமனத்திற்கான ஆணையை ஜெயலலிதா இன்று வழங்கினார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் கடந்த 7ம் தேதி 20 தமிழர்கள், ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பல்வேறு தமிழ் கட்சியினரும், அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 நபர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இதனையடுத்து ஆந்திர மாநில முதல்வருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
அக்கடிதத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலரும் இறந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும், அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என்றும், அதிரடிபடையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாடுடன்தான் நடந்ததா என்று சந்தேகம் எழும்புவதால் ஒரு விரைவான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆணையிடவேண்டும் என்றும் அதன்பேரில் உண்மை நிலை அறியப்பட்டு மனித உரிமை மீறல் குற்றம் நடந்திருந்தால் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வர திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய குழு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அமரர் ஊர்திகள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றைத் தமிழகத்திற்கு திரும்ப கொண்டு வருவதற்காக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை திருப்பதி அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக திருப்பதியில் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்காக மஞ்சுநாதா, காவல்துறை தலைவர் தலைமையில் காவலர் குழு ஒன்று திருப்பதிக்கு அனுப்பப்பட்டது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக அரசு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகளாக இருப்பதாலும், அவர்களது ஏழ்மை மற்றும் துயர நிலை கருதியும், அவர்களது குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மனுதாரர்களது கோரிக்கையினை ஏற்று அவர்களது தகுதிக்கேற்ப 17 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சமையல் உதவியாளர் பணியும், 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சத்துணவு ஒருங்கிணைப்பாளர் பணியும் மற்றும் ஒருவரது வாரிசுதாரருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணியும் வழங்கிட ஆணையிட்டார்.
அதன் அடிப்படையில் மேற்கண்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 5 நபர்களுக்கு அவர்களுக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார். ஜெயலலிதாவிடமிருந்து பணிநியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், தங்களது ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கருணையுடன் பணி நியமன ஆணைகளை வழங்கியமைக்காக ஜெயலலிதா அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications