அட, ஆட்சியை தக்க வைக்கதாங்க மோடியைப் பார்த்துள்ளார் எடப்பாடி.. விஜயகாந்த் பொளேர்
ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காகவே பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
சென்னை: மீதமுள்ள நான்கு ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே பிரதமர் நரேந்திர மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நடத்தியுள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று பிரதமரை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அரசு திட்டங்களுக்காக பிரதமரை சந்தித்தேனே தவிர அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றார்.
இந்த சந்திப்பு குறித்து விஜயகாந்த் கூறுகையில், தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே பிரதமரை முதல்வர் சந்தித்துள்ளார். மக்கள் பிரச்சினைகளில் தமிழக அரசு கவனக்குறைவாகவே செயல்படுகிறது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? பொறியியல் கல்லூரிகளுக்கு இலவச கல்விக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.14,000 கோடி நிலுவையில் உள்ளது. அதை தமிழக அரசு உடனே வழங்குவதற்தான பணிகளை செய்ய வேண்டும் என்றார் அவர்.