மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நகரும் சிகிச்சைப் பிரிவுகள்… ஜெ. தொடங்கி வைத்தார்
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் வாகனங்கள் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.4 கோடியே 49 லட்சம் செலவிலான 31 நகரும் சிகிச்சைப்பிரிவு வாகனங்களின் சேவையினை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டம் - கடலூரில் 3,650 சதுர அடி கட்டிட பரப்பளவில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர், சமையலர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.54 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

அரசினர் குழந்தைகள் இல்லம்
விருதுநகர் மாவட்டம் - மல்லிபுதூரில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர், உதவிகண்காணிப்பாளர், தலைமைகாவலர், வாயிற் காவலர், பாதுகாவலர், சமையலர், காவலர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கு 11,550 சதுர அடி கட்டிட பரப்பளவில் ரூ.1 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் சார்பில் திறந்துவைக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 28 லட்சம் ஆகும்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள்
மாவட்டத் தலைநகரங்களில் 6 வயதுவரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயன்பெறும் குழந்தைகளுக்கும், அவர்களது துணையாளர்களுக்கும் போக்குவரத்துபயணச் சலுகை வழங்கப்பட்டாலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இம்மையங்களுக்கு தொடர்ந்து வருவதில் சிரமங்கள் உள்ளதால், இம்மையங்களின் முழு பயனையும் அவர்களால் பெற இயலவில்லை. எனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 32 நகரும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
31 நகரும் சிகிச்சைப் பிரிவுகள்
அதன்படி, அனைத்து கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் பொருட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் வாகனங்கள் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்திற்கேசென்று சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.4 கோடியே 49 லட்சம் செலவிலான 31 நகரும் சிகிச்சைப்பிரிவு வாகனங்களின் சேவையினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 2 ஓட்டுநர்களுக்கு வாகனத்தின் சாவிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
வசதியான வாகனங்கள்
நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்ற பிசியோதெரபி சாதனங்களைக்கொண்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் பணியாற்றும் முடநீக்கு வல்லுநர்கள் மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று சிகிச்சைஅளிப்பார்கள். இந்த சிறப்பு வாகனங்களில், இயன்முறை சிகிச்சைக் கருவிகளோடு செயல்திறன் பயிற்சி, பேச்சுப்பயிற்சி, பிறந்த குழந்தைகளை பரிசோதனை செய்தல், ஆரம்ப நிலையில் குறைகளைக் கண்டறிதல், உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு செய்தல், பயிற்சி அளித்தல், விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் அளவிற்கு வாகனத்தின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வாகனங்களின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள், குறுந்தகடுகள், தகவல்கையேடுகள் போன்றவை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.












Click it and Unblock the Notifications