திருப்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகம்… ஜெ. திறந்து வைத்தார்
திருப்பூர் : திருப்பூரில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகர காவல் ஆணையரகத்தை வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
இது குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பூர் மாநகரத்தில் மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிலாளர்கள் இடம்பெயர்வால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகரத்திற்கு தனியாக ஒரு காவல் துறை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பிற்கேற்ப, திருப்பூர் மாநகரத்திற்கு புதிய காவல் துறை ஆணையர் அலுவலகம் அமைத்திடும் வகையில், 536 பணியிடங்களை உருவாக்கிட 17 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், அலுவலகப் பயன்பாட்டிற்கான உபகரணங்களுக்கு 19 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
புதிதாக உருவாக்கப்படும் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகமானது, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், வீரபாண்டி, ஊத்துக்குளி, அனுப்பர்பாளையம் போக்குவரத்து, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மத்திய காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் எல்லைகளை உள்ளடக்கி மொத்தம் ஏழு காவல் நிலையங்கள், மூன்று போக்குவரத்து காவல் நிலையங்கள், இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் ஒரு மத்திய குற்றப்பிரிவு ஆகியவை புதிய ஆணையரகத்தின் கீழ் செயல்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications