ஜெயலலிதா நலம்... விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் - ஒய்.எஸ். சௌத்ரி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.சௌத்ரி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகியுள்ள நிலையில், முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள் தினசரி சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஒய் எஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று சௌத்ரி வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌத்ரி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியை சந்தித்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.
முதல்வர் விரைவில் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். தற்போது வரை 95 சதவீதம் குணமடைந்துள்ளார் எனவும், 5 சதவீதம் மட்டும் குணமடைய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர் என்றார். மேலும், ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும் சௌத்ரி கூறினார்.