அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா டிஸ்மிஸ்.. கட்சிப் பதவியும் காலி; விஜயபாஸ்கரின் மா.செ பதவி பறிப்பு
சென்னை: தமிழக கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையாவின் அமைச்சர் பதவியும், கட்சிப்பதவியையும் பறித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சின்னையாவின் வசம் இருந்த கால்நடைத்துறை அமைச்சர் வளர்மதிக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருக்க கூட்டணி பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியும் அரசியல் கட்சியினர் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் அதிமுகவில் பலர் களையெடுக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்களின் கட்சி பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் சின்னையாவின் அமைச்சர் பதவியையும், கட்சிப்பதவியையும் அதிரடியாக பறித்துள்ளார் ஜெயலலிதா முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று டி.கே.எம் சின்னையாவை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து ஆளுநர் ரோசையா உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு டி.கே.எம். சின்னையா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா அமைச்சரவையில் டி.கே.எம். சின்னையா இடம் பெற்றிருந்தார்.
கடந்த 20ம் தேதி பி.வி.ரமணா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ரமணாவை தொடர்ந்து டி.கே.எம். சின்னையா அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் 25முறைக்கு மேல் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சின்னையாவின் வசம் இருந்த காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சிட்லபாக்கம் ராஜேந்திரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜெயலலிதாவை சந்தித்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
புதுக்கோட்டை அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை அதிமுக மாவட்ட செயலராக வைரமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அ.தி.மு.க.வில் களையெடுக்கும் வேலையில் முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார். கட்சிக்குள் கோஷ்டியை ஏற்படுத்தி வருவதாக எழுந்த புகாரில் அமைச்சர் சின்னையா அமைச்சர் பதவியுடன் மாவட்டச் செயலர் பதவியையும், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரின் கட்சி பதவிகளை அதிரடியாக பறித்தார்.
இதோடு காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலரான தண்டரை மனோகரன் , தாம்பரம் நகர செயலர் கரிகாலன் ஆகியோர் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.
அ.தி.மு.க.வில் தற்போது ஐவர் அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணி ஆட்டம் காணும் நிலையில் உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மூவரின் கட்சிப்பதவியும் சின்னையாவின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications