"விசிட்டர்"களைச் சந்திக்க மேலிடம் பச்சைக்கொடி... மீண்டும் பார்வையாளர்களைச் சந்திக்கும் முதல்வர்!
சென்னை: நிதியமைச்சராக இருந்தபோது தினசரி காலையிலும், மாலையிலும் தனது அதிகாரப்பூர்வ பங்களாவில் பார்வையாளர்களைச் சந்தித்து வந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் முதல்வரான பின்னர் இது தடைபட்டுப் போனது.இது மேலிடத்தின் கவனத்திற்குப் போகவே, தொடர்ந்து பார்வையாளர்களைச் சந்திக்கலாம் என்று மேலிடம் தற்போது பச்சைக் கொடி காட்டியுள்ளதாம். இதனால் மீண்டும் பார்வையாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார் பன்னீர் செல்வம்.
அவர் நிதியமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அந்தத் துறை சம்பந்தமான புகார்கள், கோரிக்கைகளுடன்தான் பலரும் வந்து சென்றனர். தற்போது முதல்வராகவும் பன்னீர் செல்வம் இருப்பதால், பொதுவான கோரிக்கைகளுடனும் அவரை சந்திக்க முடிவதாக பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது ஓ.பன்னீர் செல்வம் தற்போது வசிக்கும் அதிகாரப்பூர்வ பங்களாவான தென் பென்னை. நிதியமைச்சராக இருந்தபோது இந்த வீட்டில்தான் வசித்தார். இப்போது முதல்வரான பின்னரும் கூட இதே வீட்டில்தான் ஜாகை.
முன்பு நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தினசரி காலை மற்றும் மாலையில் பார்வையாளர்களைச் சந்திப்பார் ஓ.பன்னீர் செல்வம். திடீரென எதிர்பாராதவிதமாக முதல்வரானதால் இந்த சந்திப்பு நின்று போனது. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து மேலிடத்திற்கு அதாவது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு போனதாம். அதைக் கேட்ட அவர், இதில் தவறு இல்லையே, தொடர்ந்து சந்தியுங்கள் என்று முதல்வரை அறிவுறுத்தினாராம். இதையடுத்து தற்போது மீண்டும் பார்வையாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளாராம் முதல்வர்.
அவரது துறை மட்டுமல்லாமல் பொதுவான கோரிக்கைகளுடனும் தற்போது பார்வையாளர்கள் பன்னீர் செல்வத்தை சந்தித்து மனுக்களை அளிக்க ஆரம்பித்துள்ளனர்.
கட்சியினர் மட்டுமல்லாமல், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரையும் சந்திக்கிறார் முதல்வர்.
மேலும், முன்பு போல இல்லாமல் தற்போது முதல்வருக்குரிய மரியாதையை சக அமைச்சர்கள் அளிக்க ஆரம்பித்துள்ளனராம். அதாவது எங்காவது வெளியூர் போனால் முதல்வருக்கு உரிய முறையில் முன் கூட்டியே சொல்லி விட்டுத்தான் செல்கிறார்களாம்.