#வர்தா: 'அம்மா' பெயர் வைத்த புலிகள் இருக்கும் வண்டலூர் பூங்காவை பார்வையிட்ட ஓ.பி.எஸ்.
சென்னை: வர்தா புயலால் முற்றிலும் சேதம் அடைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவை முதலவர் ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை பாடி, மாத்தூர் பகுதிகளை பார்வையிட்டார் பன்னீர்செல்வம். வர்தா புயல் கரையை கடந்த பழவேற்காட்டுக்கும் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொன்னேரியில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்த பன்னீர்செல்வம் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து அவர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் வண்டலூர், கேளம்பாக்கம், மகாபலிபுரம், காஞ்சிபுரம் பகுதிகளில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
வர்தா புயலால் வண்டலூர் உயிரியல் பூங்கா முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அங்குள்ள மிருகங்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஏராளமான மரங்கள் விழுந்து கிடப்பதால் அதிகாரிகளால் பூங்காவிற்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவையும் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications