பானை வியாபாரியும் பகல் கனவும்... நாகையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை
நாகை எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பானை வியாபாரியின் பகல்கனவு எத்தகைய விளைவை ஏற்படுத்தியது என்று கூறினார்.
நாகப்பட்டினம்: ஆட்சி கலையவேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம் பகல்கனவாகவே முடியும் என்று நாகப்பட்டினம் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கதை சொல்லி விளக்கியுள்ளார்.
ஒரு ஊரில் ஒரு பானை வியாபாரி இருந்தார். அந்த வியாபாரிக்கு தினசரியும் 2 பானைக்கு மேல் விற்பனையாகாது

ஒருநாள் ஒருவர் மொத்தமாக 20 பானைகள் வேண்டும் என்று கேட்டு வந்தார். அதற்கு மகிழ்ந்த அந்த வியாபாரி பானையை ரெடி செய்யத் தொடங்கினார்.
சந்தோசமாக பானைகளை அடுக்கி வைத்தார். அப்படியே அவரது கற்பனை குதிரையை தட்டி விட்டார்.
இந்த 20 பானைகளை விற்று அதில் வரும் பணத்தில் கோழி வாங்க வேண்டும். அதை விற்று ஆடு வாங்க வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு கறவை மாடு வாங்க வேண்டும். அந்த மாடு கன்று போடும்,பால் தரும். அதில் வரும் லாபத்தை வைத்து வண்டி வாங்க வேண்டும்.
நல்ல விலைக்கு குதிரை ஒன்றையும் வாங்க வேண்டும். அந்த குதிரை குட்டி போடும். பின்னர் வசதி பெருகி விடும்.
திருமணம் செய்ய வேண்டும். குழந்தைகள் பிறக்கும். அந்த குழந்தைகள் பானை சட்டி செய்யும் போது களிமண்ணில் விளையாடும். அவர்களை நாம் விரட்டி விட வேண்டும் என்று பலவாறு யோசித்துக்கொண்டே காலை நீட்டினார் அந்த குயவர்.
அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் மொத்தமும் விழுந்து நொறுங்கியது. அப்போதுதான் அந்த குயவர் பகல் கனவு கண்டு மொத்தத்தையும் தொலைத்து விட்டோமே என்று கவலைப்பட்டார்.
இந்த மாதிரிதான் பலரும் தற்போது பகல் கனவு காண்பதாக கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி கலையவேண்டும் என்றும் அதை கலைக்க வேண்டும் என்றும் பகல் கனவு காண்பவர்களின் எண்ணம் பானை வியாபாரியின் கதை போலவே முடியும் என்று சொல்லாமல் சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி.
அது மட்டுமல்லாது யாரையும் அதிகம் விமர்சித்து பேச வேண்டாம் என்றும், இன்று நம்மை விட்டு விலகியிருப்பவர்கள் நாளை நம்மோடு வந்து இணைவார்கள் என்றும் தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications