முதல்வர் பதவி மூர் மார்க்கெட்டில் விற்கும் பொம்மை அல்ல... கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
முதல்வர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்கும் பொம்மை அல்ல, நினைத்தவுடன் வாங்குவதற்கு என்று நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : 100 நாட்களில் தேர்தல் வந்தாலும் தனியாக சந்தித்து முதல்வராவேன் என்று நடிகர் கமலின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் குறித்து பேசி வருகிறார். மேலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆழமான கருத்துகளை முன்வைத்து வருகிறார்.
தனிக் கட்சி தொடங்குவதாக தெரிவித்திருந்த கமல், தமிழகத்தில் இன்னும் 100 நாள்களில் தேர்தல் வந்தாலும் தான் தனியாக சந்தித்து முதல்வராவேன் என்றும் கூறியிருந்தார். மேலும் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் டெங்கு மரணம் தவிர்க்க ஆவண செய்யாத அரசு என்றும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: டெங்குவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு பிரசாரத்தில் கமலின் மகளும் பங்கேற்றிருக்கிறார்.

விரைவில் நீதிபதி
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு விரைவில் நீதிபதி நியமனம் செய்யப்படுவார். விசாரணை கமிஷன் விசாரணையை தொடங்கும்போது விடைத் தெரியாத பல கேள்விகளுக்கு விடை தெரியவரும். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அடிப்படை உறுப்பினரல்லாத தினகரனால் பொதுக் குழுவை கூட்டமுடியாது.

பொம்மை அல்ல
முதல்வர் பதவி ஒன்றும் மூர் மார்க்கெட்டில் விற்கும் பொம்மை அல்ல. உடனே் போய் வாங்கிக் கொள்வதற்கு. இங்கு முதல்வரானவர்கள் யாரும் நேரடியாக வந்துவிடவில்லை. கவுன்சிலர், நகர்மன்ற தலைவர், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தே வந்துள்ளனர்.

மக்கள் பணி
முதல்வரானவர்கள் அனைவரும் மக்களுடன் மக்களாக பழகி மக்கள் பணியாற்றியவர்கள். கமலை போல் டுவிட்டரில் இருந்தால் எப்படி மக்கள் ஏற்பார்கள். 100 நாள்களில் முதல்வர் பதவி என்பது 100 நாள்கள் சினிமாவை ஓட்டுவது போன்றா?.

சிவாஜி கணேசன் நிலை
சிவாஜி கணேசனும் கட்சியைத் தொடங்கினார். அரசியலுக்கு வந்தார். ஆனால் அவரால் எம்எல்ஏ-கூட ஆகமுடியவில்லை. முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்று கிராமங்களில் பழமொழி கூறுவதுண்டு. அதுபோன்று கமல் முதலில் கட்சி தொடங்கட்டும், பிறகு பார்க்கலாம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications