வெள்ள நிவாரணத்திற்கு இதுவரை ரூ.339 கோடி அளித்த நிறுவனங்கள், தொழில் அதிபர்கள்: தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இன்று (நேற்று) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கப்பட்டன.
லார்சன் ஆண்டு டவ்ப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் ரூ.10 கோடியே 80 லட்சம் வழங்கினார். அதேபோல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆர். கோடீஸ்வரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.4 கோடியே 18 லட்சத்து 82 ஆயிரத்து 12 வழங்கினார்.
ஐ.டி.பி.ஐ. வங்கியின் முதன்மை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைவர் (தெற்கு) ரபிநாராயன் பாண்டா ரூ.1 கோடியே 25 லட்சம் வழங்கினார். அதேபோல் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) செயல் இயக்குனர் எஸ். கோபிநாத், பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.1 கோடியே 63 லட்சத்து 27 ஆயிரத்து 230 வழங்கினார்.
பாங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.ஏ. சங்கர நாராயணன் ரூ.1 கோடி வழங்கினார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் ரூ.18 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 242 முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (நேற்று) முதல்-அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications