செந்தில் பாலாஜி சொன்னாரே.. “விவசாயிகள் மனம் குளிர” திருச்சியில் மாஸ் காட்டப்போகும் முதல்வர் ஸ்டாலின்
திருச்சி: 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை திருச்சியில் வரும் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே 2 கட்டங்களாக 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எரிசக்தி துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் விளை நிலங்களின் பரப்பை அதிகரித்து, விவசாய உற்பத்தியினை பெருக்கி, உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாகவும் மற்றும் பசுமைப் புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், நடப்பு 2023-24ஆம் ஆண்டில் 50 ஆயிரம் எண்ணிக்கை புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

ஏற்கனவே, திமுக ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பல ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காமல் அல்லலுற்று வந்த 1 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு பெற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையில் 50,000 விவசாயிகளுக்கு புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பின்படி, விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் தொடங்கின. இந்நிலையில், வரும் ஜூலை 17ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நாளை காலை திருச்சிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் தங்கியிருந்து கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜூலை 27ஆம் தேதி அரசு விழாக்களில் பங்கேற்கிறார். வேளாண் உழவர் நலத்துறை சார்பில் திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கண்காட்சியில் வேளாண் சங்கமம் 2023 என்ற பெயரில் நடைபெறும் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியின்போது 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே 2 கட்டங்களாக 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக தற்போது 50 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications