மேலாண்மை வாரிய எதிர்ப்பு கூட்டாட்சிக்கு எதிரானது- தமிழகமும் இந்தியாவில்தான் இருக்கு- சீறிய தம்பிதுரை
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது; தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது.. தமிழர்களும் இந்தியர்கள்தான் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசமாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்றைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக் கொண்டது மத்திய அரசு.
ஆனால் திடீரென நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பேரணி
இந்நிலையில் டெல்லியில் திடீரென அதிமுக எம்பிக்கள் ஒன்று திரண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக பிரதமர் அலுவலகம் நோக்கி சென்றனர் அதிமுக எம்பிக்கள்.

7 பேருக்கு அனுமதி
ஆனால் அனைத்து அதிமுக எம்பிக்களையும் சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார். 7 அதிமுக எம்பிக்கள் மட்டுமே பிரதமர் அலுவலகத்துக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அக்குழு பிரதமர் அலுவலக செயலரிடம் மனு கொடுத்தனர்.

பிரதமர் அலுவலகத்தில்...
பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக செயலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது...
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மேலாண்மை வாரியம் தேவை
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். இதில் இருந்து மத்திய அரசு பின்வாங்கக் கூடாது

தமிழர் நலன்காக்க..
தமிழர் நலனை மத்திய அரசு காக்க வேண்டும். ஏனெனில் தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது.. தமிழர்களும் இந்தியர்கள்தானே..

அக்கறை இல்லை
தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் நடுவர் மன்ற உத்தரவை செயல்படுத்தியிருக்க வேண்டும்.. மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும்.

அரசியல் கூடாது
காவிரி பிரச்சனையில் அரசியல் செய்வது சரியல்ல.. அன்று காங்கிரஸ் செய்த அதே துரோகத்தை பாஜகவும் தற்போது செய்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications