குட் நியூஸ்.. 20 கோடியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்.. அடேங்கப்பா.. இத்தனை அம்சங்களா?
சென்னை: சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் சென்னையின் உள்பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் பேருந்தில் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் கிளம்பாக்கத்திலேயே ரூ.20 கோடியில் புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் நிலையத்தை அடைய ஆகாய நடைபாதை அமைக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்காக தினசரி ஆயிரக்கணக்கான அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து செல்வதால் சென்னை நகரில் கடும் போக்குவரத் நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், வரும் காலத்தேவையை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மிகபிரம்மாண்டமாக அமையும் இந்த பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து ஜுன் மாதம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை புறநகரில் அமையும் இந்த பேருந்து நிலையத்தின் அருகே ரயில் பாதை செல்வதால் ரயில் நிலையத்தை அமைத்தால், மக்கள் எளிதாக சென்னை நகருக்குள் செல்ல முடியும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு, கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் புதன்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில்
புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்த, புதிய புறநகர் ரயில் நிறுத்தம் மற்றும் ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு ஆகாய நடைமேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்திருந்தது. அதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் நேற்று முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்போது சாலை வழியாக மட்டுமே போக முடியும். மின்சார ரயில் நிலையம் கிளாம்பாக்கத்தில் இல்லை. எனவே, கிளாம்பாக்கத்தில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்தது. இதற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ரூ.20 கோடி செலவில் இங்கு ரயில் நிலையம் அமைய போகிறது.
இந்த பணிகளை ரயில்வே மேற்கொள்ள உள்ளது. இந்த பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ.4 லட்சம் நிதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் விரைவில் ரயில்வே நிர்வாகத்திற்கு அளிக்க உள்ளது. ஆகாய நடைபாதை அமைக்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள வரும் ஜுலை மாதம் டெண்டர் கோரப்படும். இதன்பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்றார்கள்.












Click it and Unblock the Notifications