பேரிடர் பயிற்சியின்போது கோவை மாணவி பலியானது இதனால்தான்.. போலீஸ் சொல்லும் காரணம்
கோவையில் கல்லூரி மாணவி லோகேஷ்வரியை மாடியிலிருந்து தள்ளியதால்தான் அவர் கீழே விழுந்தார் என திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
Recommended Video
கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவி லோகேஷ்வரியை மாடியிலிருந்து தள்ளிவிட்டதால்தான் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ளது கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு கடந்த வியாழக்கிழமை நாட்டு நலப்பணித்திட்டத்தின் (என்எஸ்எஸ்) சார்பில் மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 3 மணி முதல் செய்முறை பயிற்சி நடத்தப்பட்டது. அதில் உயரமான கட்டடங்களில் தீப்பிடித்தால் கீழே குதித்து தப்புவது எப்படி என்பது தொடர்பான பயிற்சி நடத்தப்பட்டது.
சன்ஷேடு மீது குதித்தார்
இந்த பயிற்சியை ஆறுமுகம் (31) என்பவர் நடத்தினார். இதற்காக கல்லூரியின் 3-ஆவது மாடியிலிருந்து 2-ஆவது மாடியில் உள்ள ஜன்னலின் சன்ஷேடு மீது மாணவர்களை குதிக்குமாறு கூறினர்.
குதித்தார்
அவ்வாறு விழும் மாணவர்களின் பாதுகாப்புக்காக மற்ற மாணவர்கள் பெரிய வலையை விரித்தபடி நின்றிருந்தனர். முதலில் சில மாணவர்கள் குதித்தனர். அவர்கள் பாதுகாப்பாக வலையில் பிடிக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொருவராக குதித்துக் கொண்டே இருந்தனர்.
வற்புறுத்தல்
அப்போது கல்லூரியில் பிபிஏ 2-ஆம்ஆண்டு படிக்கும் மாணவி லோகேஷ்வரிக்கான (19) வாய்ப்பு வந்தது. 3-ஆவது மாடியின் சன்ஷேடு பகுதியில் ஏறிய லோகேஷ்வரி கீழே பார்த்ததும் பயத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டார். அப்போது பயிற்சியாளர் ஆறுமுகம், "ஒன்றும் இல்லை, சும்மா குதியுங்கள், கீழே வலைதான் உள்ளது. எதுவும் ஆகாது" என்று வற்புறுத்தினார்.
ஆத்திரமடைந்து
எனினும் லோகேஷ்வரி சன்ஷேடு பகுதியை கெட்டியாக பிடித்து கொண்டு குதிக்காமல் இருந்தார். ஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம் குதிக்குமாறு வற்புறுத்தியதால் அவர் பயத்தில் சப்தமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், லோகேஷ்வரியை தள்ளிவிட்டார்.
சன்ஷேடு பகுதியில்
அப்போது அலறிக் கொண்டே கீழே விழுந்த லோகேஷ்வரியின் தலை மற்றும் கழுத்து பகுதி முதல் மாடியில் உள்ள சன்ஷேடு பகுதியில் இடிபட்டது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தரை பகுதியை நோக்கி அவர் வேகமாக விழும் போது மாணவர்கள் வலையில் பிடித்து கொண்டனர்.
மருத்துவமனையில் உயிரிழப்பு
படுகாயமடைந்ததால் ஏதோ முணுமுணுத்துவிட்டு சுயநினைவை இழந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
போலி பயிற்சியாளர்
மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸார் விசாரணையில் பயிற்சியாளர் ஆறுமுகம் போலியானவர் என்று தெரியவந்தது.