ரூ.2.43 லட்சம் மோசடி வழக்கு.. சுகேஷுக்கு ஆக. 17 வரை காவல் நீடிப்பு
ரூ.2.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் கோவை நீதிமன்றம் சுகேஷுக்கு ஆகஸ்டு 17 வரை காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை: இரட்டை இலை சின்னம் கிடைக்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திகார் சிறையில் உள்ள சுகேஷை ஆகஸ்டு 17 வரை நீதிமன்ற காவலில் வைக்கக் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கணபதி சிவசக்தி காலனியைச் சேர்ந்தவர் ராஜவேலு. பர்னிச்சர் கடை வைத்துள்ள இவரிடம், 2010-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம், பெல்லாரி மாநகராட்சியில் சமையலறை உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.43 லட்சம் மோசடி செய்த புகாரில் சுகேஷ் கைது செய்யப்பட்டார்.
மோசடி வழக்கில் ஆஜராகாத இருந்த சுகேஷுக்கு கோவை நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு சுகேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றம், சுகேஷுக்கு ஆகஸ்டு 17ம் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.