குளச்சல் வர்த்தக துறைமுகம் பற்றிய மீனவர்கள் போராட்டம் தேவையற்றது: நுகர்வோர் சங்கம் ஆட்சியரிடம் மனு
நாகர்கோவில்: தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான திட்டமான குளச்சல் வர்த்தக துறைமுகத்தை மீனவர்கள் எதிர்ப்பது தேவையற்றது என குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளதாவது,
தென்மாவட்ட வளர்ச்சிக்கான மிகப்பெரிய திட்டமான குளச்சல் வர்த்தக துறைமுகம் என்பது மாவட்ட மக்களின் 40 ஆண்டு கால கனவு திட்டம். இந்த திட்டம் வருவதற்காக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஆதரிப்பதும், எதிர்கட்சி ஆன பின்பு எதிர்ப்பதும் வேடிக்கையாக உள்ளது.
தற்பொழுது கேரளா மாநிலம் விழிஞ்சத்தில் துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மீனவ மக்கள் வசிக்கும் மும்பை, கொச்சி, தூத்துக்குடி துறைமுகங்களை எடுத்துக் கொண்டால் அந்த பகுதி மீனவ மக்களுக்கு எந்த விதமான ஒரு சிறிய பாதிப்புகள் இல்லாமல் மீன்பிடித்து நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள். இங்கு மேற்படி வர்த்தக துறைமுகம் ஏற்கனவே 18 நாடுகளில் கடலில் விமான நிலையம் உள்ளது போன்று தென்மாவட்டமே வளர்ச்சி பெறும் வகையில் கடலிலே இந்த துறைமுகம் மிகுதியான பகுதி அமைய உள்ளதாக அறிகின்றோம்.
இந்த துறைமுகங்கள் எல்லாம் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று அந்த பகுதி மீனவர்கள், மக்கள் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளார்கள் என்பதை நேரில் சென்று பார்வையிட்டாலே அதன் உண்மை தன்மை தெரியவரும். மேலும் தற்பொழுது நமது மாவட்டத்தில் மட்டும் சின்னமுட்டம், முட்டம், தேங்காய்பட்டணம், ராஜாக்கமங்கலம் போன்ற பெரிய, சிறிய மீன்பிடித் துறைமுகம் மிகுதியான அளவு மீன்பிடிக்க வசதியாக உள்ளது. திட்டம் குறித்த தெளிவான விபரம் தெரிவதற்கு முன்பே மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த திட்டத்தில் ஒரு சில இடங்களில் சிறிய அளவு பாதிப்புகள் இருந்தாலும் கூட குமரி மாவட்டத்திலுள்ள 18 லட்சம் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும். குமரி மாவட்ட இளைஞர்கள் வேலைக்காக வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கு பதிலாக உள்ளூரிலே மிகப்பெரிய வேலைகள் கிடைக்க நல்ல வசதிகளும், வாய்ப்புகளும் ஏற்படும். இதனால் வேறு மாநில மக்களுக்கும் நம் மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் கொடுக்கும் நிலை ஏற்படும். மாவட்ட மக்களின் வாழ்க்கை தரம் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புகள் ஏற்படும். மாவட்ட வளர்ச்சியை தடுக்காதீர்கள். 40 ஆண்டுகால மாவட்ட மக்களின் கனவு திட்டம் நிறைவேற ஒத்துழைக்க மாவட்ட நிர்வாகத்தையும், அனைவரையும் வேண்டுகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
குளச்சல் துறைமுகம் பற்றிய கூடுதல் தகவல்கள்:
குளச்சல் துறைமுகம் தென்தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலேயே மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இருந்து சூயஸ் கால்வாய் சீனா, ஜப்பான் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கரையோர நாடுக்கு செல்லும் கடற்பாதையாகும். மேலும் குளச்சல் துறைமுகம் இந்தியாவில் மிகவும் ஆழம் உள்ளதாகவும் கடற்கரையில் 60 அடி ஆழம் உள்ள துறைமுகமாகும். குளச்சல் துறைமுகம் பூலோக ரீதியில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் கொச்சி, மங்ளூர், மார்கோவா, மும்பை, கண்டாலா துறைமுகங்களும், கிழக்குப் பகுதியில் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப், கொல்கத்தா துறைமுகங்களும் அமைந்துள்ளது. குளச்சல் இதன் காரணமாக இந்திய துறைமுகங்களுக்கு நடுமையமாக பண்டக மற்றும் சரக்கு பரிமாற்றம் செய்ய தகுந்த துறைமுகமாக விளங்குகிறது.
தற்சமயம் கொழும்பு, துபாய், சிங்கப்பூர் துறைமுகங்களின் உதவியுடன் இந்தியாவின் பொருட்கள் மற்றும் கன்டெய்னர்கள் பரிமாற்றம் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் அனைத்து துறைமுகங்களும் ஆழம் குறைந்தவை.
பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகம் ஒன்று இந்தியாவின் தெற்கு கோடியில் குளச்சலில் அமைவது மிகவும் தேவையாகிறது. குளச்சல் துறைமுகம் அதிக எடையுள்ள கப்பல்களும் வந்து செல்ல வசதியும், ஆழமும், அதற்கேற்ற அமைப்பும் கொண்டது. இதன் காரணமாக 1995ம் ஆண்டு இந்திய கடல் போக்குவரத்து வல்லுநர்கள் இந்தியாவில் குளச்சல் துறைமுகத்தை பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகமாக மாற்றி, வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கான கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூரின் பண்டக பரிமாற்றம் செய்யும் பங்கை எடுத்துப் போட தீர்மானம் செய்தனர்.
குளச்சல் துறைமுகத்தை பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகமாக ஆக்க 1998-ம் ஆண்டு டெசிட் என்ற துறைமுக அமைப்பு பரிந்துறை செய்தது. தமிழக அரசின் பரிந்துரைப்படி மலேசியாவின் துறைமுக அமைப்பு நிறுவனம் 2001-ம் ஆண்டு குளச்சல் துறைமுகம் அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு துறைமுக அமைப்பு, சாலைகள் மற்றும் ரயில் பாதை அமைப்பு சம்பந்தமான மேம்பாடு பரிசோதனை மற்றும் ஆய்வுகள் செய்து குளச்சலில் பெருந்துறைமுகம் அமைக்க பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப ரீதியான சாதகமான அறிக்கை அளித்தது.
1.குளச்சல் பெருந்துறைமுகம் அமைக்கவும் அதற்கு முன் ஆய்வு அறிக்கைகள் திட்ட அறிக்கைகள், பரிசோதனை அறிக்கைகள் தயாரித்து அதன்படி துறைமுகத்தை அமைக்கவும் சர்வதேச டெண்டர்கள் சர்வதேச அளவில் பத்திரிகைகளில் வெளியிடப்படல் வேண்டும்.
2. குளச்சல் சரக்கு மற்றும் பெட்டக பரிமாற்றல் துறைமுகம் தன் முழு அளவு செயல்பாட்டு காலத்தில் 7 ஆயிரம் தொழில் நுணுக்க வல்லுநர்களுக்கு வேலை அளிப்பதுடன் மறைமுகமாக 15 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு அளிப்பதுடன், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு மூலதனம் துறைமுகம், சாலை, ரயில்வே மற்றும் தொழில் துறைகளில் முதலீடு செய்யப்படும். ஆகையால் தென்தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் மேம்பாடு திட்டத்தை முழுமையாக கவனிக்க தமிழக அமைச்சரவையில் தனியாக ஓர் அமைச்சருக்கு பொறுப்பு கொடுக்கப்படல் வேண்டும்.
கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச பெருந்துறைமுகம் அமைப்பு திட்டத்தை மேற்பார்வையிட திரு.எம். விஜயகுமார் என்ற அமைச்சர் தனியாக பொறுப்பு வகிப்பதால் துரிதமாக திட்டம் செயல்படுகிறது. சென்னையில் தமிழக செயலகத்தில் குளச்சல் துறைமுக முன்னேற்றம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக எந்ந நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை, எந்த பொறுப்பான பதிலும் கொடுக்கப்படுவதும் இல்லை. ஆகையால் 3 கோடி ரூபாய்க்கு மேல் மூலதனத்துடன் செயல்பட போகிற குளச்சல் பெருந்துறைமுகம் திட்டத்தை செயல்படுத்த தமிழக தலைமைச் செயலகத்தில் தனி பிரிவு அமைக்கப்படல் வேண்டும்.
4. குளச்சல் பெருந்துறைமுக திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே குளச்சல் மணவாளக்குறிச்சி கடற்பகுதியில் 500 ஏக்கர் அரசாங்க நிலம் வள்ளியாறு முகத்துவாரத்திலிருந்து குளச்சல் மைனர் துறைமுகம் அலுவலகம் வரையில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. குளச்சல் கடற்கரையில் அமைந்துள்ள இந்த 500 ஏக்கர் நிலம் குளச்சல் பெருந்துறைமுகம் அமைக்க உடனடி தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம். மேலும் தேவைப்படும் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் முடிந்த நிலையில் அவற்றிற்கான ஆவணங்கள், படவரைவுகள், ஏற்கனவே கல்குளம் தாலுகா அலுவலகம், துணை கலெக்டர், தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) அலுவலகத்தில் உள்ளது. அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குளச்சல் பெருந்துறைமுக திட்டம் பக்கத்து துறைமுகங்களான சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களுக்கும், ஏனைய துறைமுகங்களுக்கும், துணையாக செயல்பட்டு இந்திய துறைமுகங்களுக்கும், ஏனைய துறைமுகங்களுக்கும் துணையாக செயல்பட்டு இந்திய துறைமுகங்களின் முன்னேற்றத்திற்கு உதவிடும்.
இந்த கனவுத்திட்டம் நிறைவேறுமா..?