அண்ணா சாலையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்: 3 விரல்கள் துண்டாகின
சென்னை: சென்னை அண்ணா சாலையில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டது.
சென்னை எர்ணாவூர் பாரதி நகர் 2வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சக்ரவர்த்தி(18). நந்தனத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் திங்கட்கிழமை மாலை கல்லூரி முடிந்த பிறகு நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் ஏறி அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கினார்.
அவர் இறங்கி நடந்ததும் அதே பேருந்தில் இருந்து இறங்கிய 4 பேர் அவரின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அவர் தலையில் வெட்டு விழாமல் இருக்க கையை வைக்க அவரது இடது கையில் வெட்டு விழுந்து 3 விரல்கள் துண்டாகிவிட்டன.
இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்து அலறினர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதற்கிடையே இது குறித்து தகவ்ல கிடைத்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் சக்ரவர்த்தியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரது விரல்கள் துண்டானதால் அதை ஒட்டுவதற்காக அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சக்ரவர்த்தி வெட்டப்பட்டதற்கு கல்லூரி பிரச்சனை அல்லது காதல் பிரச்சனை காரணமா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications