பத்திரிக்கையாளர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!
நெல்லையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நெல்லையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் பத்திரிக்கையாளர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை கண்டித்து நெல்லையில் காவல்நிலையம் முன்பு சக பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தை கலைக்க அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டிவி, நாளிதழ்களில் செய்தி
திருநெல்வேலி மாட்டம் மகேந்திரகிரி அருகே இஸ்ரோவின் துணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு சில தினங்களுக்கு முன்பு குண்டு வெடித்ததாக தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டன.

பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்
இச்செய்தியை வெளியிட்டதற்காக தொலைக்காட்சி செய்தியாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள், நாளிதழ்களின் நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் மீது காவல் துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது.காவல்துறையின் இத்தகைய செயலை கண்டித்து இன்று காலை திருநெல்வேலியில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள், நாளிதழ்களின் நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்திட ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

உடைகள் கிழிப்பு, காயம்
ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் பல பத்திரிகையாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களது உடைகளும் கிழிந்துள்ளது.தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்களை போலீஸார் கைதும் செய்துள்ளனர்.போலீஸாரின் இத்தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
காவல்துறையின் இத்தகைய செயல் ஜனநாய விரோதச் செயலாகும்.கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் இச் செயல் கண்டனத்திற்குரியது. பத்திரிகை நிருபர்கள் ,புகைப்பட கலைஞர்கள் ,தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீதான வழக்குகளை உடனடியாக காவல்துறை திரும்பப் பெற வேண்டும். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என , தமிழக அரசையும், காவல்துறை தலைவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications