அமைச்சர் ஆனந்தனை விடமாட்டேன்... விடாது கருப்பாய் விரட்டும் ஜெயமணி
சென்னை: சிக்கல்கள் எல்லாம் ஒருவழியாக தீர்ந்து மீண்டும் வனத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார் எம்.எஸ்.எம் ஆனந்தன். காசிக்கு போனாலும் கருமம் தொலையாது என்கிற ரீதியில் பதவியேற்ற பின்னரும் விடாது கருப்பாய் விரட்டி வருகிறார் திருப்பூர் ஜெயமணி.
ஆனந்தன் தன்னிடம் 1 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டார் மீது கடந்த ஆண்டே திருப்பூர் காந்தி நகரை சேர்ந்த ஜெயமணி என்ற பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். திடீரென்று பதவி பறிக்கப்பட்டவே, ஜெயமணி கொடுத்த புகார்தான் பதவி பறிப்புக்குக் காரணம் என்று அப்போது பேசப்பட்டது.

சென்னை வந்த ஜெயமணி
ஆனந்தன் மீண்டும் அமைச்சர் ஆகப்போவதாக அறிவிப்பு வெளியான உடனேயே தனது உறவினர்களுடன் சென்னை வந்துவிட்டாராம் ஜெயமணி. எம்.எஸ்.எம் ஆனந்தன் மீதான புகாரை மனுவாக தயாரித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுக்க முயன்றார். மேலும், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும் கொடுக்க முயன்றார் ஆனால் முடியவில்லை.

போயஸ்கார்டனில் தர்ணா
கடந்த வியாழக்கிழமை சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவைப் பார்க்க வந்தபோது, ஜெயமணி போயஸ் கார்டன் ஏரியாவை சுற்றி வந்தார். இது ஏதடா புது சிக்கல் என்பதை அறிந்த போலீசார் ஜெயமணியையும் அவரது குடும்பத்தினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

ராஜ்பவனில் தீக்குளிப்பேன்
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயமணி, ‘தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், எம்.எஸ்.எம்.ஆனந்தன் பதவியேற்பு நடைபெறும்போது, ராஜ்பவனுக்குப் போய் குடும்பத்தோடு தீக்குளிப்பேன்' என்று அறிவித்தார்.

ஜெயமணி கைது
ஜெயமணியை விட்டு வைத்தால் பதவி ஏற்பு விழாவுக்கு செல்லும் முதல்வர் ஜெயலலிதாவின் கான்வாயில் புகுந்து மனு அளிக்க வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால் அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது என கருதிய போலீசார் அவரை சனிக்கிழமையன்றே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

குடும்பத்துடன் கைது
ஜெயமணி தங்கியிருந்த தனியார் ஹோட்டலுக்குச் சென்ற 30க்கும் மேற்பட்ட போலீசார், ஜெயமணி, அவருடைய பாட்டி சுப்பாத்தாள், தாய் சாந்தமணி, மகன் அருண்குமார் ஆகிய நால்வரை கைதுசெய்து தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வைத்தனர்.

மாலையில் விடுதலை
எம்.எஸ்.எம்.ஆனந்தன் பதவியேற்பு முடிந்து, முதல்வர் ஜெயலலிதா ராஜ்பவனைவிட்டு போயஸ் கார்டன் வீட்டுக்குப் போன பிறகும் ஜெயமணியையும் அவரது குடும்பத்தினரையும் ஞாயிறன்று மாலை 6 மணிக்குத்தான் அவர்களை விடுவித்தனர்.

விடமாட்டேன் அமைச்சரை
கைது செய்தாலும் அமைச்சர் ஆனந்தன் மீதான புகாரை முதல்வரிடம் கொண்டு சேர்க்காமல் விடமாட்டேன் என்று ஜெயமணி தொடர்ந்து போயஸ் கார்டன் ஏரியாவைச் சுற்றி வருகிறாராம். விடாது கருப்பாய் ஜெயமணி விரட்டுவதால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம் ஆனந்தன்.












Click it and Unblock the Notifications