கார்த்தி மீது புகார் கூறிய அதிகாரி கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்: ப.சிதம்பரம்
சென்னை: வேட்புமனு தாக்கலின்போது சொத்து மதிப்பை மறைத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் கூறிய அதிகாரி கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் உள்ள சொத்துக்களை கணக்கில் காட்டியிருந்தார்.

ஆனால் அவர் தனது மகள் பெயரில் உள்ள சொத்துக்களை கணக்கில் காட்டவில்லை என்று டெல்லியில் வருமானவரி துறை ஆணையராக பணிபுரியும் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா என்பவர் வேட்புமனு பரிசீலனையின் போது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கார்த்தி சிதம்பரம் மீது வருமான வரித்துறை ஆணையர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்துள்ள புகார் மனு மீது விளக்கம் அளித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா என்ற அரசு அதிகாரி சிவகங்கை தொகுதி தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நேற்று ஒரு மனுவை கொடுத்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அந்த மனுவில் துளியும் உண்மையில்லை. ஸ்ரீவஸ்தவா பல வழக்குகளை தொடர்பவர். அவர் மீது வருமானவரித்துறை இலாகா பூர்வமான ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ள அதே புகார்களை கொண்ட மனு ஒன்றை டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி முன் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை 3-12-2011 அன்று ‘‘விஷமத்தனமானது மற்றும் அபத்தமானது'' என்று நீதிபதி தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்று அறிகிறேன். அந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் என்றும் அறிகிறேன். இதுபோன்ற நபரின் பூர்வாங்கத்தை விசாரித்து செய்தி வெளியிட வேண்டுமென்று ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications