குமரி மாவட்டத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க லஞ்சம் என புகார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க லஞ்சம் கேட்டது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் ஸ்கூட்டருக்கு மானியம் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரூ. 225 லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
வேலைக்குச் செல்லும் மகளிர் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஸ்கூட்டர் வாங்க கடந்த 22ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
குறைந்த அளவில் விண்ணப்பம்
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களிலும் நேற்று ஏராளமானோர் திரண்டனர். விண்ணப்பிக்க ஏராளமானோர் வந்து இருந்தாலும், பலரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் அரசு எதிர்பார்த்த அளவில் பல இடங்களில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஒரு லட்சம் விண்ணப்பம் கொடுக்க முடிவாகி இருந்த நிலையில், குறைவான எண்ணிக்கையிலையே விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதிக அளவில் குவிந்த பெண்கள்
முன்னதாக விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களிடம் அதிகாரிகள் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனால் விண்ணப்பம் பெறும் பணி இரவு வரை நீடித்தது.
மாவட்ட அதிகாரிகளிடம் புகார்
இந்த நிலையில் மேற்கு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.225 வசூலிக்கப்பட்டதாகவும், இதனால் அங்கு பெண்கள் பலர் கூடி அதிகாரியிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து பணம் பெறுவது நிறுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உறுதி அளித்த அதிகாரிகள்
இதுகுறித்து மாவட்ட மகளிர் திட்ட அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 2700 பேருக்கு மட்டுமே மானியம் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக இதுவரை மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில் தகுதி உள்ளவர்களுக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் விண்ணப்பத்திற்கு பணம் வாங்கப்பட்டு உள்ளதாக புகார் வந்து உள்ளது. அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.