பாஜக-விசிக மோதல் தொடர்கிறது.. மயிலாடுதுறையில் கற்கள் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டதால் பதற்றம்
மயிலாடுதுறையில் பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். அதற்கு பதில் தெரிவித்த தமிழிசை கட்டப்பஞ்சாயத்து செய்பவர், நிலத்தை வளைத்து போடுபவர் என திருமாவளவனை விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அண்மையில் கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்குழு கூட்டத்தின் போதும் எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடியுடன் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தை முற்றுகையிட்டனர்.

கறுப்புக்கொடி காட்டிய விசிக
அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புப்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி கற்களாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

கைதுக்குப் பிறகும் தாக்குதல்
இதைதொடர்ந்து காவல்துறையினர் கறுப்புக்கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றினர். கைதுக்குப் பிறகும் பாஜகவினர் வேனையும் வேனில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் தாக்கினர்.

முற்றும் மோதலால் பரபரப்பு
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தீவிரமடைந்து மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications