டிஎன்பிஎஸ்சி, நெட் என ஓரே நாளில் இரு தேர்வுகள்... தலையை பிய்த்து கொள்ளும் பட்டதாரிகள்
சென்னை: தமிழகத்தில் ஓரே நாளில் டிஎன்பிஎஸ்சி தேர்வும், நெட் தேர்வும் வருவதால் இந்த இரண்டுக்கும் விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் எதில் கலந்து கொள்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் தலைமை செயலகம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நிதித்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் நேர்முக எழுத்தர், அரசு துறைகளில் உதவியாளர்கள் ஆகிய துறைகளில் காலியாக உள்ள 2269 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான கடைசி நாள் மார்ச் 4ம் தேதியுடன் முடிந்தது. இந்த நிலையில் 577 பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 2846 காலி பணியிடங்களுக்கும் வருகிற ஜூன் 29ம் தேதி தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்து விட்டது.
இதற்கிடையே பல்கலை கழக மானிய குழு என்று அழைக்கப்படும் யுஜிசி நடத்தும் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வும், உதவி தொகையுடன் ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி தேர்வும் ஜூன் 29ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பிதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தில் இந்த தேர்வை நடத்துவதற்காக சென்னை பல்கலை கழகம், கோவை பாரதியார் பல்கலை கழகம், மதுரை காமராஜர் பல்கலை கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகம், புதுச்சேரியில் புதுச்சேரி பல்கலை கழகம் ஆகிய பல்கலை கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முதலில் அறிவிக்கப்பட்டது என்ற போதிலும் நெட் தகுதி தேர்வு தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படும் தேர்வாகும். எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பலர் நெட் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இரண்டு தேர்வுகளும் ஓரே நாளில் வருவதால் எந்த தேர்வை நடத்துவது என முதுநிலை பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
நெட் தகுதி தேர்வை மாற்றுவது முடியாத காரியம். எனவே டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வை வேறு நாளில் வைக்க வேண்டும் என முதுநிலை பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.