41 சீட்டுகளை வாங்கி வெறும் 8 இடங்களில் வென்ற திருந்தாத காங்கிரஸ்!
சென்னை: திமுகவிடம் 60 தொகுதிகள் கேட்டு ஒருவழியாக 41 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் 8 தொகுதிகளில்தான் வென்றிருப்பது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் தொகுதிகள் அதிகபட்சம் 10ஆகத்தான் இருக்க முடியும். அதுவும் திமுகவுடன் கூட்டணி அமைத்தால்தான் இது சாத்தியமாகும்.
ஆனால் 2011 சட்டசபை தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை காட்டி மிரட்டி 63 தொகுதிகளை திமுகவிடம் இருந்து வாங்கியது காங்கிரஸ். அதுவும் அறிவாலயத்தில் கீழே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே சிபிஐ மூலம் அறிவாலயத்தின் மாடியில் உள்ள கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தியெல்லாம் பணிய வைத்தது காங்கிரஸ்.

இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளைத்தான் காங்கிரஸ் திமுகவிடம் கேட்டது. தொடக்கத்தில் காங்கிரஸுக்கு 20 முதல் 30 தொகுதிகளே அதிகம் என்ற மனநிலையில்தான் திமுக இருந்து வந்தது. மிக அதிகபட்சமாக 25 தொகுதிகள் கிடைக்கலாம் என கூறப்பட்டது. தமிழ் மாநில காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கவும் திமுக திட்டமிட்டது.
ஆனால் தமிழ் மாநில காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் தமாகாதான் வரவில்லையே கூடுதல் தொகுதிகள் தர வேண்டும் என பேரம் பேசி ஒருவழியாக 41 தொகுதிகளை அடம்பிடித்து வாங்கியது காங்கிரஸ். தமிழகத்தில் செல்வாக்கே இல்லாத காங்கிரஸுக்கு எதுக்கு 41 தொகுதிகள் என திமுக நிர்வாகிகளே புலம்பிக் கொண்டிருந்தனர்.
தற்போதைய தேர்தல் முடிவுகளுமே காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் என்பது மிகவும் அதிகம் என்பதை நிரூபித்து விட்டிருக்கிறது. மொத்தமே 8 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்திருக்கிறது. எஞ்சிய 33 தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்த 33 தொகுதிகளில் திமுக எளிதாக வெற்றி பெறக் கூடியவை 10 முதல் 15 தொகுதிகள். உதாரணமாக வேடசந்தூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக.
அக்கட்சியின் வேட்பாளர் சிவசக்திவேல் கவுண்டர் அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவத்தை விட விட 19,000 வாக்குகள் குறைவாக பெற்றிருக்கிறார். ஆனால் இத்தொகுதியில் திமுக தன்னுடைய வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அதிமுக வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிப் போயிருக்கும்.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் காங்கிரஸின் மணிரத்னம் போட்டியிட்டு 37,346 வாக்குகள் தான் பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். திமுகவே இத்தொகுதியில் களமிறங்கியிருந்தால் காட்டுமன்னார்கோவில் தொகுதியின் நிலைமையும் வேறாகி இருக்கும்.
இப்படி காங்கிரஸ் மண்ணைக் கவ்விய தொகுதிகளில் சரிபாதியில் திமுக போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் வாய்ப்புகளும் உருவாகியிருக்கும்.
சொந்த காசில் சூனியம் வைப்பது போல காங்கிரஸுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்து அரியாசனத்தை இழந்து நிற்கிறது பரிதாப திமுக!












Click it and Unblock the Notifications