தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசுவோம்- கருணாநிதியை சந்தித்த பின்னர் குலாம்நபி ஆசாத் தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்வதற்காக கருணாநிதியை சந்திக்க குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வருகை தந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் இருவரையும் வரவேற்றனர். முதலில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத்தும் முகுல் வாஸ்னிக்கும் பின்னர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்க சென்றனர்.
கோபாலபுரம் சென்ற குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்கை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கருணாநிதியை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு, கனிமொழி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவினரும் பங்கேற்றனர்.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது 25 தொகுதிகளே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜி.கே. வாசன் தனிக்கட்சியை தொடங்கி வெளியேறிவிட்டதால் காங்கிரஸுக்கு குறைந்த இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது திமுக. இருப்பினும் தேமுதிக கூட்டணியில் இடம்பெறாததால், அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கருணாநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்; தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய இன்னும் சிறிது காலம் ஆகும் என்றார்.