வேட்புமனு தாக்கல் முடியும் நேரத்தில் தென் சென்னை வேட்பாளரை 'கண்டுபிடித்தது' காங்கிரஸ்!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிய சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில் தென் சென்னை தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி ஒருவழியாக அறிவித்துவிட்டது. தென்சென்னையில் எஸ்.வி. ரமணி போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். ஆனால் தென் சென்னை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அக்கட்சியால் கண்டு பிடிக்க முடியாமல் தத்தளித்தது.
காங்கிரஸ் கட்சியின் மயிலை பெரியசாமி, ராஜாஜியின் பேரன் கேசவன் ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிட விரும்பினர் .ஆனால் காங்கிரஸ் கட்சியோ திடீர் கூட்டாளியான நடிகர் கார்த்திக்குத் தள்ளிவிட முயன்றது.
அதே நேரத்தில் நடிகை நமீதாவையும் இறக்கிவிடலாம் ஒரு கணக்குப் போட்டது. எதுவுமே காங்கிரஸுக்கு கை கொடுக்கவில்லை. வேட்பு மனுத்தாக்கல் முடிவடையும் நேரம் என்பதால் வேறுவழியில்லாமல் எஸ்.வி. ரமணி என்பவரை தென் சென்னை வேட்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.
அதேபோல் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் என்பவரையும் வேட்பாளராக அறிவித்துள்ளார் ஞானதேசிகன்.