இளங்கோவன் திடீர் மறியல் போராட்டம்! மின் கட்டண உயர்வை எதிர்த்து டிச.17ல் ஆர்ப்பாட்டம்!!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திடீரென இன்று சத்தியமூர்த்தி பவன் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் திடீரென்று சில அமைப்பினர் காமராஜரை அவதூறாகப் பேசிய கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் கருத்து பற்றி பதில் கொடுத்துவிட்டோம். அதன் பின்னரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீஸ் எப்படி பாதுகாப்பு கொடுக்கிறது? என்று கேட்டார்.
இதனைத் தொடர்ந்து திடீரென அப்படி எனில் நாங்களும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று போட்டி மறியல் போராட்டத்தில் குதித்தார் இளங்கோவன். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்ட பின்னர் போராட்டத்தைக் கைவிட்டார் இளங்கோவன்.
இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
சத்தியமூர்த்தி பவன் அருகே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி உள்ளனர். காமராஜர் எங்கள் உயிர். அவர் குறித்து கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துக்கு நான் பதில் அளித்து விட்டேன். அதன் பிறகும் யாருடைய தூண்டுதலின் பேரிலோ நடந்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்ததை கண்டித்து நான் தொண்டர்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டேன்.

தண்டனை பெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜாமீனை ரத்து செய்யக்கோரி போயஸ் கார்டன் முன்பு நாங்கள் போராட்டம் நடத்த தயார். இதற்கு போலீசார் அனுமதி அளிப்பார்களா?
மின் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும். சென்னை தவிர எல்லா மாவட்டங்களிலும் மின் வெட்டு உள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 17-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் பேராட்டத்தில் கலந்து கொள்கிறேன். மற்ற மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
நடிகை குஷ்புவும் காங்கிரஸில் சேர்ந்த பின்னர் நடக்க உள்ள முதல் போராட்டம். குஷ்பு சென்னையில் கலந்து கொள்வாரா? அல்லது வேறு ஒரு இடத்தில் கலந்து கொள்வார என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications