கூடலூர் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் கைது: சிறையில் அடைப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ஷாஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது தர்மகிரி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (42). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஓவேலி பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் கியூ பிரிவு போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இவரது வீட்டின் அருகில் உள்ள ஆட்டு கொட்டகையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஷாஜியை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவரை நியூஹோப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் கூடலூர் நீதிபதி அருணாசலம் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ஷாஜியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைக் கேட்ட ஷாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உடல் நிலை தேறி சகஜ நிலைக்கு திரும்பிய ஷாஜியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஷாஜி மீது போலீஸ் மற்றும் வனத்துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.