ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா மட்டும் காரணமல்ல... சொல்வது பொன். ராதாகிருஷ்ணன்
அவங்க சேலையை தூக்கி முள்ளு மேல போட்டுட்டாங்க... நாங்க அதை கிழியாம எடுக்க முயற்சி பண்றோம் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸ் கூட்டணிஅரசு தான் முழு காரணம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அவரது போட்டியில் இது போன்ற கருத்துக்களையே கூறி வருகிறார்.
பொங்கல் பண்டிக்கைக்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது.
கொலை செய்த காங்கிரஸ்
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம் என்று கூறி வருகிறார் பொன். ராதாகிருஷ்ணன். அவரது கடந்த வார பேட்டியில் இதனை தெரிவித்தார்.
துரோகம் செய்தார்கள்
ஜல்லிக்கட்டு நடக்கும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை கூறி வந்தார் பொன். ராதாகிருஷ்ணன். 2011ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் திருநாவுக்கரசர்தான் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

பீட்டா மட்டும் காரணமல்ல
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா அமைப்பு மட்டும் காரணமல்ல என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ்தான் காரணம்
ஜல்லிக்கட்டு தடைக்கு முழு முதற் காரணம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் என்றும், அவர்களுடைய ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட போது, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அடுத்த டிசம்பர் வரை
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வந்து விட்டது. ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்த பொங்கல் வரை இனி ஜல்லிக்கட்டு நடக்கும் என்றும் அது நடக்காமல் போனதற்கான காரணத்தையும் கூறி பேட்டி தருவார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications