திமுகவுடன் கூட்டணி... 'சீட்டுக்காக' காங். தலைமை அலுவலகத்தில் குவிந்த கோஷ்டிகள்
சென்னை: திமுகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விருப்ப மனு கொடுக்க காங்கிரஸ் நிர்வாகிகள் திரள்வதால் அக்கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் 'ஜேஜே'வென களைகட்டியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிகாரத்தில் பங்குதரும் கட்சியுடன் கூட்டணி; இல்லையேல் தனித்தே போட்டியிடும்; ராகுல்காந்தியை முதல்வராக்குவோம் என ஏகத்துக்குமான சபதங்களை மேற்கொண்டுவந்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அத்தனை சபதங்களையும் குலாம்நபி ஆசாத்- கருணாநிதி சந்திப்பின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன் கைவிட்டுவிட்டார்.
கோஷ்டிகளும் கப்சிப்
"திமுக தலைமையில் ஆட்சி அமைப்பதுதான் இலக்கு; ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது இலக்கு அல்ல" ஒரே போடாக குலாம்நபி ஆசாத் போட்டுவிட்ட பிறகு இளங்கோவன் என்னதான் செய்ய முடியும்... திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியான பின்னர் இளங்கோவன் மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சியில் விருப்பமனுவை வாங்குவதையே புறக்கணிப்போம் என அறிவித்த அத்தனை கோஷ்டிகளும் தங்களது சபதத்தையும் கைவிட்டுவிட்டன.
திருவிழா கோலம்
திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி என சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்.... காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் நேற்று திருவிழா கோலமாக காட்சியளித்தது.
அத்தனை கோஷ்டிகளும் ஆஜர்
அதுவும் விருப்பமனுவையே வாங்கமாட்டோம்; விருப்ப மனு அறிவிப்பில் கோபண்ணா குளறுபடி செய்துவிட்டார் என்றெல்லாம் குறுக்குசால் ஓட்டிய அத்தனை கோஷ்டிகளின் நிர்வாகிகளும் விருப்ப மனு கொடுக்க வேர்க்க வியர்க்க காத்திருந்தனர்.
தவமாய் தவமிருந்து
குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான காங்கிரசார் குவிந்திருந்தனர். மற்ற கட்சிகளைப் போல அல்லாமல் காங்கிரஸில் விருப்ப மனு ரூ5,000தான்... இதனால் எப்படியாவது யாரையாவது பிடித்து சீட் வாங்கி தொகுதி கிடைத்துவிட்டால் எம்.எல்.ஏ.வாகிவிடும் என்ற பெருநம்பிக்கையோடு காங்கிரசார் சத்தியமூர்த்திபவனில் தவம் கிடந்ததையும் பார்க்க முடிந்தது.