காங்கிரஸ் கட்சியை ரிப்பேர் பார்க்கும் வேலை தீவிரம்.. ஞானதேசிகன் தகவல்
மதுரை: தமிழக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனியாகவே போட்டியிடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
மதுரை வந்த ஞானதேசிகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் மாற்றம் நடந்து வருகிறது. கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி குழுக்களும் அமைக்கப்பட்டு வருகிறது. ஒருவர் 5 ஆண்டுகள் பதவி வகிக்கலாம். அதன் பிறகு ஜனநாயக முறைப்படி நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் முதல் புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து மாவட்டம் தோறும் சந்தித்து பேச இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி சார்பில் பேஸ்புக் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கு வேலைவாய்ப்பு உள்ளது என்பதை இளைஞர்கள் அறிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ் மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஒருமுறைதான் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த உடனேயே ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள்.
மீனவர்கள் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். விலைவாசி உயர்வு, மக்கள் பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் தொடர்ந்து போரட்டம் நடத்தும். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications