பிரதமர் மோடிக்கு கஞ்சி பானைகள் அனுப்ப முயன்ற 20 பேர் கைது
பிரதமர் மோடிக்கு கஞ்சி பானைகள் அனுப்ப முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கஞ்சி பானைகள் அனுப்பும் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.
மக்களிடையே புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அன்றாடம் பயன்பாட்டில் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாததால் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள் உள்பட பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே அவரது அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கஞ்சி பானைகள் அனுப்பி வைக்கப்படும் என்று அனைத்து இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி அறிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து தபால் நிலையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் தலைமையில் 20 பேர் கஞ்சி பானைகளுடன் தபால் நிலையம் நோக்கி வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications