சென்னையில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி பலி: 4 பேர் காயம்
சென்னை: சென்னை எழும்பூரில் லிப்ட் அறுந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார். 4 தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
எழும்பூர் எத்திராஜ் சாலையில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று 16 மாடி கட்டிடம் கட்டி வருகிறது. இந்த கட்டிட பணியில் 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கட்டிடத்தில் மேல்பகுதிக்கு செங்கல்,மணல்,சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை கொண்டு செல்வதற்காக தாற்காலிக லிப்ட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த லிப்ட் மூலம் கட்டடத்தின் மேல் பகுதிக்கு கட்டுமான பொருள்களை கொண்டு செல்லும் பணியில் தொழிலாளர்கள் புதன்கிழமை மாலை ஈடுபட்டனர்.
அப்போது அந்த லிப்ட் திடீரென அறுந்து கீழே விழுந்தது. கீழே நின்றுக் கொண்டிருந்த விபின் (20), நாகராஜ்,பிரபுலால்,ராஜ் ஆகிய தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விபின் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.