அநியாய வசூலைத் தடுக்கத் தேவை "அம்மா ஆட்டோ"...நுகர்வோர் அமைப்பு கோரிக்கை!
சென்னை: கூடுதல் கட்டண வசூலைத் தடுக்கும் வகையில் ‘அம்மா' ஆட்டோக்களை இயக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளிடம் ஆட்டோ ஒட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சென்னையில் திருத்தப்பட்ட மீட்டர் கட்டண முறையை தமிழக அரசு அமல் படுத்தியது. ஆனபோதும், அவ்வப்போது கூடுதல் கட்டண புகார் எழத்தான் செய்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சி.பால் பர்னபாஸ், பொருளாளர் பழனிகுமார், செயலர் ஆனந்த், வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:-

காலிப் பணியிடங்களை நிரப்புதல்:
நுகர்வோர் நீதிமன்ற வழக்குகளை குறித்த காலத்தில் முடிக்கும் வகையில், இந்த நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள், அலுவலகப் பணியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

கள ஆய்வு :
அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திடவும், அவை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய,அரசு அதிகாரிகள் அவ்வப்போது களஆய்வு செய்யவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.

மருந்தகங்களில் சோதனை :
காலாவதி மருந்து, மாத்திரைகள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை :
சென்னையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், ஆட்டோ பயணிகளிடம் பேரம் பேசுவதும், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்கும் தொடர்கிறது.

அம்மா ஆட்டோக்கள் :
ஆட்டோ ஓட்டுநர்களின் தன்னிச்சையான இந்த போக்கை மாற்றும் வகையில், அம்மா ஆட்டோ என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் ஆட்டோக்களை விட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications