ஜெ.வுக்கு கருணாநிதி வாழ்த்து.... 'பெருந்தன்மையா? சகிப்புத்தன்மையின்மையா? வெடித்த சர்ச்சை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் தெரிவித்த வாழ்த்து 2 வரிகள்தான் என்றபோதும் அதில் வெளிப்படுவது பெருந்தன்மையா? சகிப்புத்தன்மை இன்மையா? என ஒரு விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
கலைஞர் ''முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்'' என நேற்று ட்விட்டரில் பதிவிட்டதை ''Fantastic இந்தக் கலாச்சாரம் தொடரட்டும்'' என நண்பர் Vijayasankar Ramachandran வரவேற்று எழுதியிருந்தார்.

அதற்கு காலச்சுவடு இதழின் ஆசிரியர் கண்ணன் ''To wish someone recovery why refer to the difference in opinion and ideas ? This probably is the first time such a reference is made in modern political history and reeks of intolerance rather than generosity. '' என்று எதிர்வினையாற்றிருப்பதை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
இதில் 'நவீன அரசியல் வரலாற்றிலேயே' என்ற பதம் நவீன அரசியல் வரலாற்றில் மேதமைகொண்ட ஒருவரின் தோரணையை வெளிப்படுத்துவதை அங்கத உணர்வுடன் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உடல் நலமற்றிருக்கும் ஒருவரை வாழ்த்தும்போது 'கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும்' என்ற கலைஞரின் வாக்கியத்தின் மூலம் "கலைஞர் பெருந்தன்மையைவிட சகிப்புத்தன்மையின்மையையே வெளிப்படுத்துகிறார்" என தன்னுடையை அரசியல் புலமையையும் தர்க்க வலிமையையும் வெளிப்படுத்தும்போதுதான் காலச்சுவடு ஆசிரியர் தன்னுடைய மேதமையின் உச்சத்திற்குச் செல்கிறார்.
முரண்பாடுகளும் பகைமைகளும் கொண்ட ஒருவரிடம் ஒரு பொது இடத்தில் கைகுலுக்கிக்கொள்ளும்போது அல்லது அவரை ஏதோ காரணத்திற்காக வாழ்த்தும்போது அதுவரையிலான முரண்பாடுகளை நாம் நினைவுபடுத்திக்கொண்டேதான் அந்த பொது நாகரிகத்தை கடைப்பிடிக்க இயலும். அதுதான் மக்களுடன் உரையாடக்கூடிய ஒரு தலைவரின் வழிமுறை.
திமுக-அதிமுக எதிர்நிலைகள் என்பது இலட்சோபஇலட்சம் தொண்டர்களின் மனங்களில் இருக்கும் ஒன்று. அந்த இயக்கத்தின் தலைவர் தனது வாழ்நாள் எதிரிக்கு ஒரு வாழ்த்துச் சொல்லும்போது தனது நண்பர் ஒருவருக்கு வாழ்த்துச் சொல்லுவது போன்ற அதே தொனியில் சொல்ல முடியுமா?
"பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே'' என்று பாரதி சொல்வதனால் அருள் வேண்டும் நேரத்தில்கூட பகைவன் என்ற கடும் சொல்லை பாரதி பயன்படுத்துகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னால் ஒற்றுமை என்ற கருத்திற்கு பங்கம் வந்துவிடுமா?
கலைஞரின் இந்த அரசியல் பண்பு புதிதல்ல. தன்னோடு அரசியல் முரண்கொண்ட அனைவரோடும் அவர்கள் நோயுற்ற காலங்களில் மனம் நெகிழ்ந்து வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிகிறார். எம்.ஜி.ஆர் தொடங்கி சோ ராமசாமி வரை கலைஞரின் இந்தப் பண்பிற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

நேற்று கலைஞரைவிட மனநெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள் கழக உடன்பிறப்புகள். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று நேற்று உருகி உருகி சமூக வலைத்தளங்களில் அவர்கள் எழுதிய நிலைத்தகவல்களை படித்துப் படித்து எனக்கே கொஞ்சம் காய்ச்சல் வந்துவிட்டது. வெறுப்புணர்ச்சியையும் சகிப்புத்தன்மையின்மையையுமே தங்கள் வாழ்வாதாரங்களாகக் கொண்டவர்களால் கலைஞரின் இந்தப் பண்பை இந்தப் பிறவி முழுக்க புரிந்துகொள்ள முடியாது.
கலைஞரின் வாழ்த்தில் இவ்வளவு நுட்பமாக வெறுப்பைக் கண்டு பிடிப்பவர்கள் கடந்த காலத்தில் ஜெயலலிதா இந்தப் பண்பாட்டை எப்படி கடைபிடித்தார் என்பதையும் கலைஞரின் உடல்நலம் சார்ந்த விஷயங்களை அதிமுக எப்படி இழிவுபடுத்தியது என்பதையும் சேர்த்து பேசட்டும். யாருக்கு யார் பண்பாட்டை கற்றுத்தருவது?
கலைஞர் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதை இழிவுபடுத்த வேண்டும் என்பது ஒரு மனநோய். அதற்கு மருந்து கிடையாது.
இதையெல்லாம் நானே பேசிக்கொண்டிருப்பது களைப்பாக இருக்கிறது. காலச்சுவடால் கடுமையாக ப்ரமோட் செய்யப்படுகிற அதே சமயம் திமுகவில் பொறுப்பு வகிக்கிற சல்மா போன்ற கவிஞர்கள் இதற்கெல்லாம் என்ன எதிர்வினையாற்றுகிறார்கள் என்று படிக்க ஆவலாக உள்ளது.
பெருந்தன்மையைப் பற்றியும் சகிப்புத்தன்மையைப் பற்றியும் காலச்சுவடு கண்ணன் எல்லாம் பேசிக்கேட்கவேண்டிய கலிகாலத்த்தில் வாழ்கிறோம்
இவ்வாறு மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications