முதல்வர் பதவியை 'துறந்தாரா' ஓபிஎஸ்? சசிகலா ஆதரவு விளம்பரத்தால் பரபரப்பு
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் பன்னீர்செல்வம் கொடுத்துள்ள பத்திரிகை விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதில் முதல்வர் என தம்மை பன்னீர்செல்வம் குறிப்பிடவில்லை.
சென்னை: சசிகலா அதிமுக பொதுச்செயலராகிவிட்ட நிலையில் அடுத்ததாக முதல்வர் பதவிக்கும் குறி வைத்துவிட்டார். இந்த நிலையில் தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பத்திரிகைகளில் கொடுத்த விளம்பரத்தில் முதல்வர் பதவியை குறிப்பிடாமல் அதிமுக பொருளாளர் என்று மட்டுமே போட்டிருக்கிறார். இதனால் அவர் முதல்வர் பதவியை துறக்கப் போகிறாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை அக்கட்சியின் பொதுச்செயலராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார்.
பொதுச்செயலர் பதவியையும் மட்டுமல்ல முதல்வர் பதவியையும் சசிகலா குறிவைத்திருக்கிறார். ஜனவரி 12-ந் தேதியன்று சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறார். அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து கொடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தை தம்மை "கழக பொருளாளர்" என்று மட்டுமே பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வகித்து வரும் முதல்வர் பதவியை குறிப்பிடவில்லை. இதனால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை 'துறந்துவிட்டாரா" என்ற சர்ச்சை வெடித்துள்ளது.